சென்னை: சென்னையை அடுத்த நீலாங்கரை கடற்பகுதியில் ஏறத்தாழ 50 அடி ஆழத்தில் சுரேஷ், கீர்த்தி ஆகிய இருவரும் தங்களது திருமண நிச்சயதார்த்தத்தை வித்தியாசமான முறையில் செய்து கொண்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சார்ந்தவர் கீர்த்தனா.
பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களது திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரி வித்துள்ள நிலையில், கடந்த 14ஆம் தேதி முதலில் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளனர்.
கடலில் சேரும் தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு, நிச்சயதார்த்தத்தை நடத்தி உள்ளனர்.
நீலாங்கரை கடற்கரைப் பகுதியில், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தன் கற்றுத் தந்த பயிற்சி முறைகளைப் பின்பற்றி, சுவாசிப்பதற்கு தேவையான பிராணவாயு உருளையுடன் சென்ற இவர்கள், ஏறத்தாழ 50 அடி ஆழ கடல் நீருக்குள் மூழ்கி மாலை மாற்றிக்கொண்டு, தங்க மோதிரத்தையும் ஒருவருக்கொருவர் அணிவித்து நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என்றும் கூறியுள்ளனர்.