செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
dd4b3610-f150-449d-a1af-b0434cdba6ef
-

நெய்சட்டியில் கைகளைப் பயன்படுத்தி வடை சுட்டெடுத்த மூதாட்டி

சென்னை: திருவண்ணாமலையை அடுத்த செ.அகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சந்தியம்மன் கோவில் திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். சின்னகோலாப்பாடியைச் சேர்ந்த 60 வயது சந்தியம்மாள் என்ற பெண்மணி, கொதிக்கும் நெய் சட்டியில் வெறும் கையால் வடை சுட்டு, கடவுளுக்குப் படைத்து நேர்த்திக்கடனைச் செலுத்தினார். படம்: ஊடகம்

யானைக்கு சிகிச்சை அளிக்க கும்கி யானைகள் வரவழைப்பு

சென்னை: கோவை மாவட்டம், தமிழக-கேரள எல்லையான ஆனைக்கட்டி மலைப்பகுதியில் வாயில் காயத்துடன் உணவைச் சாப்பிட முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த காட்டு யானையை தமிழக வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆளில்லா கண்காணிப்புக் கேமராக்கள் (டிரோன்) மூலமாகவும் தொடர்ந்து இரண்டாவது நாளாக யானையைத் தேடி வருகின்றனர். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் யானை திரிவதால், அதற்கு யார் சிகிச்சை அளிப்பது என்பது குறித்து இருதரப்பினரும் யோசித்து வந்த நிலையில், யானைக்கு சிகிச்சை அளிக்க இரு மருத்துவக்குழுவினருடன் தயார் நிலையில் உள்ளதாகவும் சிகிச்சைக்கு உதவியாக இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன என்றும் தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.40 லட்சம் வாடகை பாக்கி;

130 கடைகளை மூடி முத்திரை

சென்னை: சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்குச் சொந்தமாக உள்ள 400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்ததாகவும் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கடைகளில் இருந்து வாடகைத் தொகை வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வாடகை செலுத்தாத 130 கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். ரூ.40 லட்சம் வாடகை பாக்கியைச் செலுத்திய பின்னரே 'சீல்' அகற்றப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 காவலர்கள் மீது நடவடிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 10 காவலர்களை வேறு இடத்துக்கு பணி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் ஆய்வாளர் பகலவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டானந்தன் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று சாராய வியாபாரம் செய்த வெங்கடேஷ் என்பவர் உட்பட நால்வரை காவலர்கள் கைது செய்தனர். மேலும், 200 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கீழ்குப்பம், சின்னசேலம் காவல் நிலையங்களில் இதுகுறித்து நேரடியாக சென்று விசாரணை நடத்திய பகலவன், சாராயம் விற்பனை செய்தவர்களிடம் தொடர்பில் இருந்ததாகக் கூறி இரு துணை காவல் ஆய்வாளர்கள், ஆறு சிறப்பு காவல் ஆய்வாளர்கள் உள்பட 10 பேரை மற்ற காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.