திருச்சி: தமிழக அரசுப் பள்ளிகளில் விரைவில் பத்தாயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்ட நிதி ரூ.1,300 கோடி வந்த உடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கான பணிகள் தொடங்கும் என்றார்.
இந்த நடவடிக்கையில் மரத்தடியில் வகுப்புகள் நடக்கும், 2,500 பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அமைச்சர்.
"அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி, ஆங்கில வழி ஆகியவற்றில் எதை விரும்பி வருகிறார்களோ அதைக் கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் பத்தாயிரம் ஆசிரியர்களை விரைவில் நியமிக்க உள்ளோம்.
"இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

