சென்னை: அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் இம்மாதம் 13ஆம் தேதி 32 கிலோகிராம் எடையுள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் அச்சரப்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி அமல்ராஜும் ஒருவர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து ஒவ்வொரு நாளும் பரபரப்பான தகவல்கள் வெளியான நிலையில், கொள்ளையடித்த நகைகளை உருக்கி பின்னர் தங்கக் கட்டிகளாக மாற்றி விற்பதற்குக் கொள்ளையர்கள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
கோயம்புத்தூர் நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் உதவியுடன் இதற்கான இயந்திரத்தையும் வாங்கினர்.
பின்னர் ஹோட்டல் அறையில் நகைகளை உருக்கத் தொடங்கிய நகைக்கடை உரிமையாளரும் கொள்ளையர்களும் புகைமூண்டதால் அதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாகக் கூறப்பட்டது.

