சென்னை: தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டவேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த சில நாள்களுக்கு முன்னர் உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். நேற்று தமது அலுவலகத்தில் காவல்துறை உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதில், சென்னையைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் தலைமைக் காவல் அதிகாரிகள் நேரடியாகவும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோர் காணொளி வாயிலாகவும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அதிகாரி சைலேந்திரபாபு, தமிழகத்தில் போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இதன்மூலம் போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

