சென்னை: ஒருவர் தமது உடல்நலத்தைப் பேணிப் பாதுகாத்தால் கவலைகள், மன சங்கடங்கள் எல்லாம் அவரை விட்டு ஓடிவிடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வாகனம் இல்லாப் போக்குவரத்தை மேம்படுத்த அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற 'ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா பாதிப்பில் இருந்து தாம் மீள உடற்பயிற்சிதான் காரணம் என்றார்.
"நல்ல உடல்நலத்துக்கு உடற்பயிற்சி அவசியம். உடல்நலனைப் பேண மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சாப்பிடும் போது பசியோடு அமர வேண்டும், சாப்பிட்ட பின் பசியோடு எழுந்துகொள்ள வேண்டும்.
"எனக்கு கொரோனா தொற்று காரணமாகப் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. உடற்பயிற்சியே அதற்குக் காரணம். எனக்கு வயது 70 ஆகிறது. ஆனால் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பிபோல இருப்போம்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

