சென்னை: சூரிய மின்சக்தி சாதனங்களை நிறுவி ஆண்டுதோறும் 2,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை நிறைவேற்றும்போது, உயர்மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகளில் சூரிய மின்சக்தி சாதனங்களை நிறுவ அந்நிறுவன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் திட்டமிட்ட இலக்கை அடைய முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
"கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், பசுமையைக் காத்தல், பாதுகாப்பான மின் ஆற்றலைப் பெறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் சூரிய மின்சக்தி திட்டத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆரம்பம் முதலே ஊக்கம் அளித்து வருகிறது.
"அந்த வகையில், முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கூரையில் சூரிய மின்சக்தி சாதனங்களை மெட்ரோ ரயில் நிறுவனம் நிறுவியது," என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
மெட்ரோ ரயிலுடன் தொடர்புள்ள இடங்களில் சூரிய மின் உற்பத்தி சாதனங்கள் மூலம் 6.56 மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சக்தி பெறுவதற்குத் தேவையான தகடுகளைப் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செலவுகளில் மின்சாரத்தின் பங்கு மட்டும் 40 விழுக்காடு என்று சுட்டிக்காட்டும் அதன் அதிகாரிகள், சூரிய மின்சக்தி மூலம் ஆண்டுதோறும் ரூ.2 கோடி மின்சார கட்டணச் செலவு சேமிக்கப்படும் என்றனர்.

