சென்னை: விரிவுரையாளர் பணிக்குத் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம் என தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்கள் இருப்பதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது.
இம்முறை காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்குமான தேர்வு இணையம் (கணினி) மூலம் நடத்தப்பட உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் தமிழ் மொழி தகுதித்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
"விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 50 மதிப்பெண்ணுக்கு கேட்கப்படும் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வில் 20 (40%) மதிப்பெண் பெற வேண்டும்.
"அப்படி பெற்றால் மட்டுமே 'பகுதி ஆ' பிரிவில் பாடம் சார்ந்த 150 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்," என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தமிழ் தெரியாத பிற மாநிலத்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று, பணியில் நியமிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், போட்டித் தேர்வுகளில் தமிழ்த்தாள் தகுதித் தேர்வை அறிமுகப்படுத்தியது. அதன்படி, தமிழ்த் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அதற்கு அடுத்தபடியாக எழுதியிருக்கும் பொதுப்பாட பிரிவு வினாக்கள் கணக்கில் கொள்ளப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

