சென்னை: அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கு தொடுக்கப்பட்டது.
18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும், ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்து இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பணி விதிமுறைகளை இந்து அறநிலையத்துறை வெளியிட்டது.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் பணி நியமனம், நிபந்தனைகள் தொடர்பாகவும் அந்தத் துறை சார்பில் புதிய பணி விதிகள் கடந்த 2022ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டன.
இதையடுத்து புதிய விதிகளை ஏற்க இயலாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
ஆகம விதிகளைக் கடைபிடிக்காமல் தமிழக அரசு கோவில்களில் அர்ச்சகர், ஓதுவார்களை நியமிக்க உள்ளதை ஏற்க இயலாது என்றும், பல கோவில்களில் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலமாக அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
கோவில் அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது.
மேலும், குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சி முடித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.