சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழா ஞாயிறு மாலை நடைபெற்றது. இந்த விழாவில், கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், "பிற மொழி உதவியின்றி தனித்து இயங்கக்கூடியது தமிழ் மொழி. 3,000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழுக்கு செம்மொழி என்ற கவுரவத்தைப் பெற்றுத் தந்தது திமுக அரசுதான்.
"'கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' வாயிலாக ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக அதிகளவாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழம் கருணாநிதியின் உருவம் பொறித்த நினைவுப்பரிசும் அடங்கியது," என்றார்.
முன்னாள் துணைவேந்தர் முனைவர் மா.ராசேந்திரன், பேராசியர் முனைவர் க.நெடுஞ்செழியன், பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோருக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
'நிறைய சம்பவங்கள்
செய்யப்போகிறோம்'
'சென்னை நாள்' கொண்டாடப்
படுவதை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், "பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் கருணாநிதி. சென்னைக்கு இப்போது 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக் காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு முன்னுதாரணம். இப்போது நீங்கள் பார்க்கும் இந்த நவீன சென்னையை வடிவமைப்பதில் மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கிறது என்பதில் பெருமை. நீங்கள் எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப்போகிறோம், காத்திருங்கள்," என்று பதிவிட்டுள்ளார்.

