சேலம்: சொகுசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 11 வயதுச் சிறுமி உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கோர விபத்து நேற்று முன்தினம் சேலம் அருகே நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓட்டம்பாறை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது புறவழிச்சாலையின் வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று அந்தக் கார் மீது மோதியது.
இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். தன்ஷிகா என்ற 11 வயதுச் சிறுமியும் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்சைக்காக சேலம் மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கொடைக்கானல் அருகே சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும் அதில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்தனர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கர்நாடகா வழியாக சுற்றுலாப் பேருந்து மூலம் அண்மையில் கொடைக்கானல் வந்தனர்.
பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த பின்னர் நேற்று காலை ஊர் திரும்ப வேண்டும் என்பது அவர்களின் திட்டமாகும்.
அதன்படி அனைவரும் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, 'டம்டம்' பாறை என்ற பகுதியில், அப்பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் அது கவிழ்ந்தது.
நல்லவேளையாக, அந்தப் பள்ளத்தில் அதிக அளவில் மரங்கள் வளர்ந்து காணப்படுவதால் பேருந்து கீழே விழவில்லை. மரங்களுக்கு இடையில் சிக்கித் தொங்கிய பேருந்தில் இருந்த பயணிகள், அதன் பின்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறினர். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து பயணிகள் பேருந்தை விட்டு வெளியேற உதவினர்.

