அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம்; விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பத்து கோரிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அவர் கடிதம் எழுதி உள்ளார். அதில், பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 15 நாள்களுக்குள் இந்தப் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் ஆட்சியரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
"அத்தியாவசிய திட்டங்களை அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பை 'உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்' திட்டம் உருவாக்கித் தந்துள்ளது.
"இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்ட நாள்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து எம்எல்ஏக்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து பரிசீலித்து ஒப்புதல்கள் வழங்கப்பட உள்ளன," என்று முதல்வர் ஸ்டாலின் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளிக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான திட்டங்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்படும் என்றும் தற்போது நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் தொகுதிகளிலும் முக்கிய திட்டங்களை நிறைவேற்றும் வகையில் முதல்வர் கடிதம் அனுப்பி உள்ளதை அரசியல் பார்வையாளர்கள் பாராட்டி உள்ளனர்.

