புதிய காலணி, தோல் தொழில்துறை கொள்கையை தமிழக அரசு வெளியிட்டது
சென்னை: தமிழ்நாடு, காலணி தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் காலணி, தோல் பொருள்கள் உற்பத்தியில் மேலும் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிதாக 200,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய கொள்கையை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடந்த காலணி, தோல் பொருள்கள் மாநாட்டில் காலணி, தோல் பொருள்கள் கொள்கை 2022ஐ வெளியிட்டார்.
பாரம்பரியமான தோல் பொருள்கள், காலணி தயாரிப்பில் தமிழகம் முன்னிலையில் இருந்தாலும் ரசாயன செயற்கை இழை மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் தேசிய அளவிலும் உலகளவிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில், தோல் பொருள்களின் அவசியத்தை உலகளாவிய சந்தைகளில் நிலைநாட்டி அவற்றுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த சிறப்பு முயற்சிகள் தேவை.
இதைக் கருத்தில் கொண்டு தனிப்பட்ட புதிய கொள்கையை உருவாக்கி அதன் மூலம் காலணி தயாரிப்புத்துறை ஏற்றுமதி துறையாளர்களுக்குச் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மேம்படுத்தலாம் என்று அரசு நம்புகிறது.
காலணி, தோல் பொருள்கள் தயாரிப்பில் கூடுதலாக ரூ.20,000 கோடி முதலீட்டை ஈர்ப்பதும் இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் புதிய கொள்கையின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலணி, தோல் பொருள்கள் தயாரிப்பு தொடர்பான குழுமங்கள், பூங்காக்கள், பொதுவான வசதிகள் என கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தோல் இல்லாத காலணிகள் தயாரிப்புக்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி சார்பு தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவும். திறன் பயிற்சித் திட்டங்கள் மூலம் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உருவாக்கப்படும்.
காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தி தொழிலை எளிதாகதொடங்குவதற்கான வாய்ப்புகளை புதிய கொள்கை மேம்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

