திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காட்டெருமையை வேட்டையாடி வீட்டில் பதுக்கிய இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.
செங்கம் பகுதியைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் வலசை மலைப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டு எருமையை வேட்டையாடி அதனை கூறு போட்டு சுமார் 15 கிலோ கறியைத் தங்கள் வீட்டில் காய வைத்திருப்பதாக வனத்துறை அலுவலர்களுக்கு முன்னதாக தகவல் கிடைத்தது.
அதனை அடுத்து அதிகாரிகள் திடீர் சோதனையைத் தொடங்கினர். அப்போது ஒரு வீட்டில் துணியைக் காய வைப்பது போல் கொடியில் காட்டெருமை கறி காய்ந்துகொண்டு இருந்ததைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டனர்.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தாங்கள் காயவைத்த கறியை அதிகாரிகள் பார்த்துவிட்டதைத் தெரிந்து கொண்ட ராயர், ஜெயபாலன் என்ற இரண்டு பேரும் எங்கோ ஓடிப்போய் விட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிந்து அதிகாரிகள் அவர்களைத் தேடிவருகின்றனர்.

