கள்ளக்குறிச்சி: இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகளை பிணையில் விடுவிக்க உயர் நீதி மன்றம் நேற்று அனுமதி அளித்தது.
ஐவரும் பிணை கேட்டு கோரிய மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மர்மமாக மரணமடைந்தார்.
மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதன் தொடர்பில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய ஐவரும் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரித்து வருகிறது.
கைது செய்யப்பட்ட ஐவரும் பிணை கேட்டு தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து பிணை கேட்டு பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
"மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை காவல்துறை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் விசாரணை அதிகாரிகள் முன்னிலையாக உத்தரவிட நேரிடும்," என்று எச்சரித்து வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் மூன்று பேர், ஆசிரியைகள் இருவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.
பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தியை நீதிபதி இளந்திரையன் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
மாணவி மரண வழக்கில் சிபிசிஐடியால் கைதான வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகாவுக்கும் பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

