மதுரை: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மிக விரைவில் 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தென் மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாகவே காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளதால், கடந்த 25ஆம் தேதி முதல் 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60,000 கனஅடியாக இருந்தது. இது அன்றைய தினம் மாலை ஐந்து மணியளவில் விநாடிக்கு 80,000 கனஅடியாக ஏற்றம் கண்டது.
இதையடுத்து, அன்று இரவு அணையில் இருந்து கூடுதல் தண்ணீரைத் திறந்துவிடுவது என முடிவானது. இரவு சுமார் எட்டு மணியளவில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 95,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 1,20,000 கனஅடியாக அதிகரிக்கும் என்று மத்திய நீர்வள அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, உரிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்பட காவிரி கரையோர மாவட்டங்களில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசும் மாவட்ட அதிகாரிகளை உஷார்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக கனமழை நீடித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்துக்கட்டியது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனமோட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

