ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக நன்மைக்காக புரட்சிப் பயணம் மேற்கொள்வேன்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்று பேரும் பெட்டிப் பெட்டியாகப் பணம் வைத்துள்ளனர் என்றும் தங்களிடம் கோடிக்கணக்கில் குவிந்துள்ள பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர் என்றும் சாடினார்.
"சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி மாறுவதால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது. ஓ.பன்னீர்செல்வத்தின் நடிப்பு ஆஸ்கார் விருதையே மிஞ்சிவிடும். அரசியலைக் கைவிட்டு நடிப்புத் துறைக்கு வந்திருந்தால் ரஜினி, சிவாஜியையே ஓ.பன்னீர்செல்வம் தோற்கடித்திருப்பார்.
"கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு இடம் இல்லை. அவர்களிடம் உள்ள பணம் பாதாளம் வரை பாய்கிறது," என்றார் ஜெயக்குமார்.
ஜெயலலிதா மரண அறிக்கையை வெளியிட வேண்டிய கடமை திமுக அரசுக்கு உண்டு என்று கூறிய ஜெயக்குமார், ஜெயலலிதா மரணம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கும் சசிகலா விசாரணை ஆணையத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்க தயங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
"அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எடப்பாடி கே பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வத்துக்கு இனி அதிமுகவில் என்றுமே இடம் கிடையாது. அவரது தற்போதைய செயல்பாடுகள் எதுவும் அதிமுகவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பன்னீர்செல்வம் மேற்கொள்வது மிரட்சிப் பயணம்," என்றார் ஜெயக்குமார்.
முன்னதாக நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இரு பிரிவுகளாக செயல்படுவதை தாம் விரும்பவில்லை என்றும் இரு தரப்பையும் இணைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விரைவில் புரட்சிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
"அதிமுகவில் உள்ள மேலும் பல தலைவர்கள் என் பக்கம் வர உள்ளார்கள். அது யார் என்பது பரம ரகசியம். ஆறுமுக சாமி ஆணைய விசாரணை அறிக்கையை முழுமையாகப் படித்த பின்பு தான் கருத்து சொல்ல முடியும். கட்சியின் நலன் கருதி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை நேரில் சந்தித்து கட்சிப் பணிக்குத் திரும்ப அழைப்பு விடுப்பேன்," என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

