வந்தவாசி: கடந்த 40 ஆண்டுகளாக வந்தவாசி பகுதியைச் சேர்ந்த கோதையான் (76 வயது), அவரது மனைவி ராணியம்மாள் (72 வயது) ஆகிய இருவரும் மழைநீரை மட்டுமே பருகி வருகின்றனர்.
தங்கள் வீட்டிலுள்ள கிணற்று நீரையோ, ஆழ்துளைக்குழாய் நீரையோ இதுவரை பயன்படுத்தியதே இல்லை என்கிறார் திரு கோதையான்.
"மழை பெய்யத் தொடங்கியதும் வீட்டுக்கூரை மேலுள்ள அழுக்குகள் அனைத்தும் சில நிமிடங்களில் மழைநீரால் அகற்றப்பட்டுவிடும்.
"அதன்பின்னர் வீட்டில் உள்ள பெரிய அண்டாக்கள், சிறுசிறு பாத்திரங்கள் என அனைத்திலும் மழைநீரைப் பிடித்து வைப்போம். அடுத்த மழைக்காலம் வரும் வரை பிடித்து வைத்த நீரை வடிகட்டி காய்ச்சி பயன்படுத்துவோம்," என்கிறார் திரு கோதையான்.
மழைநீரை எவ்வளவு நாள் சேமித்து வைத்தாலும் அதில் புழு, பூச்சிகள் அண்டாது என்றும் மழைநீரை மட்டுமே குடிப்பதால் உடல்நலப் பாதிப்பு எதுவும் இல்லாமல், மருத்துவர்களை அணுகாமல் வாழ்ந்துவருவதாகவும் இவர் கூறுகிறார்.
இந்தத் தம்பதியரைப் பார்த்து, அண்டை வீட்டாரும் மழைநீரைச் சேமித்து முடிந்தவரை அதை மட்டுமே குடிக்கத் தொடங்கி உள்ளனர். இது தங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகச் சொல்கிறார் ராணியம்மாள்.
இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்குமுன் கீழச்சமங்கலம் கிராமத்தில் வீடு கட்டி குடியேறினார் திரு கோதையான்.
அன்று முதல் இன்று வரை இருவரும் அங்கேதான் வசிக்கின்றனர். புது வீட்டில் குடியேறிய முதல் நாளில் இருந்தே குடிக்கவும் சமையல் செய்யவும் மழைநீரை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனராம்.
"மழைநீரை உயிர்நீர் என்பர். அதைச் சேமித்துப் பயன்படுத்தும் இந்தத் தம்பதியர் தங்கள் கிராமத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். நாங்களும் அவர்களைப் பின்பற்ற முயற்சி செய்கிறோம்," என்று அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

