மதுரை: வடஇந்தியாவில் இருந்து வருபவர்கள் இரண்டு திருக்குறளைச் சொல்லிவிட்டால் தமிழர்கள் ஏமாந்துவிடுவார்கள் என நினைப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அத்திப்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பேசிய அவர், பிரதமர் மோடியும்கூட அவ்வாறு நினைப்பது தவறு என்றார்.
"திருக்குறளில் உள்ள கருத்துகள் எந்தப் புத்தகத்திலும் கிடையாது. எந்த மதத்திலும் கிடையாது.
"திருக்குறளுக்கு நிகரான ஒர் சிந்தனைக் கருவூலம் உலகில் எந்த மொழியிலும் கிடையாது. அதனால்தான் பிரதமர் மோடி மிக சாதுரியமாக திருக்குறளைப் பற்றி அடிக்கடிப் பேசுகிறார்," என்றார் வைகோ.
பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றும் சிறார்களிடம் கைப்பேசியைக் கொடுக்காதீர்கள் என்றும் வலியுறுத்திய அவர், கைப்பேசியைப் பயன்படுத்துவதால் சிறார்கள் கெட்டுப்போவதாகக் கூறினார்.
பிரதமர் மோடி அண்மைக்காலமாக பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அடிக்கடி திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி வருகிறார்.
குறிப்பாக, தமிழகத்துக்குப் பயணம் மேற்கொள்ளும்போது திருக்குறளைக் குறிப்பிட தவறுவதில்லை.

