சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நான்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது திடீரென வன்முறை வெடித்ததை அடுத்து, பொதுச் சொத்துகள் சூறையாடப்பட்டன. பின்னர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன், அண்மையில் முழுமையான விசாரணை அறிக்கையை முதல்வரிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், இந்திய காவல் பணி அலுவலர்கள் உள்ளிட்ட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
"இந்தப் பரிந்துரைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவை துறைகளின் பரிசீலனையில் உள்ளதை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது," என தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

