சென்னை: பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலா பால் அளித்த புகாரின் பேரில், அவரது நண்பரும் படத்தயாரிப்பாளருமான பவ்நிந்தர் சிங்கை விழுப்புரம் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள பெரியமுதலியார் சாவடி பகுதியில் சொந்த வீடு வாங்கி அதில் குடியேறினார் அமலா பால். அந்த வீட்டில் நண்பர் பவ்நிந்தர் சிங்கும் வசித்து வந்தார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, தன் நண்பர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அமலா.
தம்மிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் இவர் கூறினார்.
இந்தப் புகாரின் பேரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவ்நிந்தர் சிங் கைதானார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 11 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
நடிகை அமலா பால் சில ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
எனினும், குறுகிய காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதையடுத்து, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார் அமலா பால்.
அதன் பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர், அண்மையில் ஒரு திரைப்படத்தை தயாரித்தார்.
இந்நிலையில், தம் நண்பர் மீதே அமலா பால் பாலியல் புகார் கொடுத்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.