சென்னை: அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், சசிகலா அனுப்பிய பெண் தூதர் அண்மையில் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அந்த பெண் தூதர் முன்பு அதிமுக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பை ஏற்றிருந்தவர் என்றும் பழனிசாமி தரப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஓபிஎஸ் தரப்பிடம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவும் மிக விரைவில் தனித்தனியே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச இருப்பதாகவும் தேவைப்பட்டால் இருவரும் இணைந்தேகூட பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே, அதிமுகவில் மீண்டும் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள விரும்பும் ஓபிஎஸ், பல்வேறு சிறப்புப் பூசைகளைச் செய்து வருவதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இதற்காக கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள நம்பூதிரிகள் மிகப்பெரிய யாகங்களை நடத்தி வருவதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரி நியமனம்
இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையில் மேலும் நான்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தக்குமார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அண்மையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த மோதலின்போது இரு காவலர்கள் உட்பட 47 பேர் காயமடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த நான்கு வாகனம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அச்சமயம் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முக்கிய கோப்புகளைத் திருடிச்சென்றதாக பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டியது.

