சிவகங்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், பாலாற்று படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள், சீமைக் கருவேல மரங்களை அகற்றாவிட்டால் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துவிடும் என சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள திருங்காக் கோட்டை, முட்டாக்கட்டி, பிரான்மலை, எஸ்.வி.மங்கலம், காளாப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்துக் கட்டியது. இதனால் மழை நீர் வெள்ளம்போல் ஓடியதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
இந்நிலையில் சிங்கம்புணரி ஒன்றிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்குச் செல்லும் வாய்க்கால்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர். பராமரிப்பு இல்லாததால் மழை நீரை சேமிக்க இயலவில்லை என்றும் சிங்கம்புணரி வழியாக ஓடும் பாலாற்றில் கடுமையான சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன என்றும் கிராம மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதன் காரணமாக பாலாற்று படுகை அருகில் உள்ள அணைக்கரைப்பட்டி, ஓசாரிப்பட்டி, பட்ட கோவில் குளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்குள் காட்டாற்று வெள்ளநீர் புகுந்துவிடும் ஆபத்து உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
"குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தக்கட்ட பருவமழை தொடங்கும். அப்போது காட்டாற்று வெள்ளம் ஏற்படும் என்பதால், துறை சார்ந்த அதிகாரிகள் பாலாற்று படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள், சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்," என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

