கூடுதலான புதிய சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகப் பட்டதாரிகளுக்கு முழுநேர வேலை
'எஸ்ஐடி' எனும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்திலிருந்து வரும் புதிய பட்டதாரிகளில் கூடுதலானோருக்கு சென்ற ஆண்டு முழுநேர வேலை கிடைத்திருக்கிறது. மேலும், வேலையில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் இருந்ததையும்விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் மீண்டு வருவதற்கு இணங்க இத்தகைய சூழல் உருவெடுத்துள்ளது.
சென்ற ஆண்டு பட்டக் கல்வி முடித்த சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக மாணவர்களில் 86 விழுக்காட்டினருக்கு நிரந்தர முழுநேர வேலை கிடைத்தது. 2020ஆம் ஆண்டுக்கான விகிதம் 69.8 விழுக்காடாகப் பதிவானது.
சென்ற ஆண்டு சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய பட்டதாரிகளில் 95.6 விழுக்காட்டினருக்குப் பட்டக் கல்வி முடித்த ஆறு மாதங்களுக்குள் வேலை கிடைத்தது. பகுதிநேர வேலை கிடைத்தோரும் அவர்களில் அடங்குவர்.
இந்த விகிதத்துக்கும் 2020ஆம் ஆண்டு பதிவான 95 விழுக்காட்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.
ஆண்டுதோறும் நடத்தப்படும் 'ஜாயிண்ட் அட்டோனமஸ் யுனிவர்சிட்டிஸ் கிராஜுவேட் எம்பிளாய்மென்ட்' எனும் கூட்டு தன்னாட்சி பல்கலைக்கழக பட்டதாரி வேலை நியமன கருத்தாய்வில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
கருத்தாய்வை சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதிக்கும் மே மாதம் 14ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தியது.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், அதனுடன் இணைந்து இயங்கும் 10 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஆகியவை வழங்கும் 33 பட்டக் கல்விப் பாடத் திட்டங்களை மேற்கொண்ட 2,006 பட்டதாரிகளில் 84.5 விழுக்காட்டினர் கருத்தாய்வில் பங்கேற்றனர்.
சென்ற ஆண்டு சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் பட்டதாரிகள் ஒவ்வொருவரின் சராசரி மாதச் சம்பளம் 3,550 வெள்ளியாகப் பதிவானது. 2020ஆம் ஆண்டு அவர்கள் சராசரியாகப் பெற்ற சம்பளம் 3,500 வெள்ளியாக இருந்தது.
இது, கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்பு பட்டதாரிகள் பெற்ற சம்பளத்தைவிட அதிகம் என்று சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் தெரிவித்தது.