சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய அவர் நான்கு நாள்கள் நடைப்பயணம் செய்து தற்போது ேகரளாவில் உள்ளார்.
தமிழகத்தில் அவரது நடைப்பயணத்தை பிரம்மாண்டமாக நடத்தும் வகையில் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. இதை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னின்று வசூல் வேட்டை செய்துவந்தனர்.
கட்சியில் உள்ள தொழிலதிபர்கள், வர்த்தக முதலாளிகள் என பலரிடமும் பெருமளவில் நிதியை வாங்கிக் குவித்தனர். அப்படியிருந்தும் செலவு அதிகமானதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு நிதி வசூலித்தும் மீதமில்லாமல் போனது கட்சியினர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்குக் காரணம், வசூல் செய்த நிதியில் முறைகேடு நடந்ததுதான் என்று கட்சி நிர்வாகிகள் தரப்பு புகார் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி, கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஒருவர் கட்சி நிதியில் முறைகேடு செய்ததாக சக நிர்வாகி ஒருவரிடம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த தகவல் சம்பந்தப்பட்
டவருக்கு சென்றதால் அவர் சமூக வலைத்தளத்தில் ஜோதிமணிக்கு நேரடியாக சவால் விட்டு பதிவு போட்டுள்ளார்.
இந்த மோதல் விவகாரம் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வலைத் தளப் பதிவுக்கு காங்கிரஸ் கட்சியினரும் மற்றவர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருவதால் மோதல் பிரச்சினை சூடுபிடித்துள்ளது.
இது, காங்கிரசார் மத்தியில் அனலைக் கிளப்பியுள்ளதால் டெல்லி தலைமை வரை இந்த விவகாரம் சென்றுள்ளது.
எனவே, ராகுல் நடைப்பயணத்துக்காக பெறப்பட்ட நிதி தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைமையிடம் வரவு-செலவு கணக்கை கேட்க டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

