பழனி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு, அடிவாரத்தில் இருந்து செல்ல கேபிள் கார் சேவை உள்ளது.
கிழக்கு கிரிவீதியில் உள்ள கேபிள் கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி கேபிள் கார் நிலையத்துக்கு புதிதாக 10 பெட்டிகள் வாங்கப்பட்டன. இதனையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி இரு வழிகளிலும் (அதாவது மேல்நோக்கி செல்ல ஒரு பெட்டியும், கீழ்நோக்கி வருவதற்கு ஒரு பெட்டியும்) தலா ஒரு புது பெட்டியை பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இது, வெற்றிகரமாக அமைந்ததால் விரைவில் அனைத்து பெட்டிகளும் கேபிள் காரில் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கேபிள் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி, கடந்த 10-ந்தேதி நடந்தது.

