சென்னை: தமிழகத்தில் 'இன்ஃப்ளுயன்ஸா' என்ற 'ஃப்ளு' காய்ச்சல் காரணமாக 282 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நேற்று பேசியபோது, "மாநிலம் முழுவதும் 'ஃப்ளு' காய்ச்சலால் 282 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளிலும் 215 குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளிலும் 54 குழந்தைகள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி ஆகியவை 'இன்ஃப்ளுயன்ஸா' காய்ச்சலின் அறிகுறிகள். இந்த அறிகுறி உள்ள குழந்தைகளிடம் இருந்து மற்ற குழந்தைகள் விலகி இருக்கவேண்டும்," எனக் கூறிய அமைச்சர், தமிழகத்தில் 243 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தேவையான மருந்து கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

