நீலகிரி: சுற்றுலாவுக்கும் தேயிலைக்கும் பெயர் போன நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரியில் பலரையும் ஒரு குயிலாக கவர்ந்து வருகிறார் ரெஜினா என்ற பெண்.
அவரது கீதம் தேயிலை தோட்ட ஊழியர்களின் களைப்பை யும் கவலையையும் மறக்கச் செய் யும் அருமருந்தாக மாறியுள்ளது.
'சின்ன சின்ன வண்ணக் குயில்', 'நாளை இந்த வேலை பார்த்து ஓடிவா நிலா', 'ஜில் ஜில் மனதில்', 'பிள்ளை நிலா' என தொடர்ந்து அவர் பாடிக்கொண்டே வேலை செய்கிறார்.
கோத்தகிரி தேயிலைத் தோட்டத்தின் வாசத்தின் ஊடே காதுகளில் தேனாய் பாய்கிறது அவரது கானம்.
இந்த கானத்துக்குச் சொந்தக் காரர் சுசீலாவா, ஜானகியா, சித்ராவா எனத் தேடுபவர்களுக்கு காட்சியாக நிற்கிறார் ரெஜினா.
"ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது," என்று கூறுவதற்கேற்ப, சக தொழிலாளர்களின் இதயத்தை வருடி வந்த ரெஜினாவின் குரல், இப்போது சமூக வலைத்தளங்களையும் வருடி வருகிறது.
"எனக்கு யாரும் சொல்லித் தரவில்லை. நானும் யாரிடமும் கற்றுக்கொள்ளவும் இல்லை.
"எங்காவது பாடல் கேட்கும். அதைக் கேட்டுப் பாடுவேன். பாத்திரம் துலக்கும்போது, சமைக்கும்போது, துணி துவைக்கும்போது, வாசல் கூட்டும்போது எல்லாம் பாடிக்கொண்டேதான் வேலை செய்வேன்," என்கிறார் ரெஜினா.
"ரெஜினாவின் திறமை எப்படியாவது இந்த உலகத்துக்கு தெரியவந்து நல்ல பெயர் அவருக்கு கிடைக்கவேண்டும். திரைப்படத்தில் பாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும்," என மற்ற தேயிலைத் தோட்ட ஊழியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

