சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நின்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து மீது மணல் லாரி மோதியதில், மஞ்சள் நீராட்டு விழாவுக்காகச் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த இரு பயணிகள் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு சொகுசுப் பேருந்து, பெத்தநாயக்கன்பாளையத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.
சென்னையில் நடைபெறும் உறவினர் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்ற ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர், பேருந்தின் வலது பக்கமாக நின்றுகொண்டு உடைமைகள், சீர்வரிசைப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, மணல் ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக் கும் நேரத்தில் பயங்கரமாக மோதிவிட்டு, உரசியபடி சென்றது.
இதனைத்தொடர்ந்து, பேருந்து சற்று தூரம் வரை இழுத்துச்செல்லப்பட்டது.
இந்த விபத்தில், சீர் வரிசை பொருள்களை ஏற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் பேருந்தின் உதவியாளரும் உயிரிழந்தனர்.
தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவலர்கள் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை விபத்து நடந்த இடத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், காவல் அதிகாரி ஸ்ரீ அபிநவ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
விபத்து நடந்த இடத்தைச் சீரமைக்கும் பணியில் காவலர்களும் சுங்கச்சாவடி ஊழியர்களும் ஈடு பட்டனர்.
"பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் நடு சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதே விபத்துக்குக் காரணம்," என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதுகுறித்தும் ஏத்தாப்பூர் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்தில் தம்பதி பலி
இதனிடையே, சேலத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் வீரபயங்கரத்தில் உள்ள குலதெய்வம் கோவில் விழாவில் பங்கேற்கச் சென்றுகொண்டிருந்த ஒரு தம்பதியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது வேன் மோதியதில் சேலம் மாவட்டம், எ.வாழப்பாடியைச் சேர்ந்த கணவன், மனைவி உயிரிழந்தனர். வேன் ஓட்டுநரும் படுகாயமடைந்த மற்ற நால்வரும் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

