சென்னை: இந்தியா முழுவதும் 75 இடங்களில் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணி மேற் கொள்ளப்பட்டது.
அனைத்துலக கடற்கரை தூய்மை விழிப்புணர்வு தினத்தை ஒட்டி சென்னையில் நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பங்கேற்றார்.
இதேபோல், யூனியன் பிரதேச மான புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.
சென்னையில் நேற்றுமுன்தினம் மாரத்தான் ஓட்டத்துடன் கடற்கரை யைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசியபோது, "இயற்கை வளங்களான கடல்வளத்தைப் பாதுகாப்பதில் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கடமையும் பொறுப்பும் உள்ளது. அதை உணர்த்தும்விதமாக கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணி நாட்டில் உள்ள 75 இடங்களில் நடத்தப்படுகிறது," என்று கூறினார்.
கடல்வளம், கடற்கரையைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னையில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், "கடற்கரைகளில் குப்பைகளைக் கொட்டக்கூடாது. குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்கவேண்டும்," என்றும் கேட்டுக்கொண்டார்.
மாரத்தான் ஓட்டத்தில் மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களில் பலரும் பங்கேற்றனர்.

