திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 44 வயது அனூப்புக்கு லாட்டரி மூலம் முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது. மலேசியா சென்று சமையல் கலைஞராக நினைத்தவருக்கு இந்தப் பரிசு கிடைத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு இந்த லாட்டரி பரிசுச் சீட்டை தனது லாட்டரி இயக்குநரகம் மூலம் அறிவித்திருந்தது.
ஒரு பரிசு சீட்டின் விலை 500 ரூபாய். பத்து வரிசைகள் கொண்ட 67.50 லட்சம் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டதில் சுமார் 66.40 லட்சம் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதன் மூலம் கேரள அரசுக்கு 330 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்தப் பரிசு சீட்டுக்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன் முடிவில் முதல் பரிசான ரூ.25 கோடிக்குரிய பரிசுச் சீட்டை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அனூப் வாங்கி இருப்பது தெரியவந்தது.
தமக்குப் பரிசு கிடைத்ததை நம்பமுடியவில்லை என்றும் போதிய வருமானம் இல்லாததால் மலேசியாவில் வேலை பார்க்கச் செல்ல இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அனூப்புக்கு மாயா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் இரண்டாவது பரிசாக ரூ.5 கோடியும் மூன்றாவது பரிசாக 10 பேருக்கு தலா ரூ.1 கோடியும் வழங்கப்படுகிறது.
முதல் பரிசுக்குரிய சீட்டை கடந்த சனிக்கிழமை இரவு ஏழு மணிக்குத்தான் வாங்கி உள்ளார் அனூப். முன்னதாக ஐநூறு ரூபாய் இல்லாததால் வீட்டில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறுகிறார்.
"அடுத்த நாளே எனக்குப் பரிசு கிடைத்துவிட்டது. இனி பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை," என்கிறார் அனூப்.