சாதனை படைத்த இருளர் பெண்

சாதனை படைத்த இருளர் பெண்

2 mins read
474bb591-3141-4076-a443-76d668b5b2ca
சட்டத் துறையில் பட்டம் பெற்ற காளியம்மாள் (படம்: இந்திய ஊடகம்) -

தமிழ்நாட்டு வழக்கறிஞர் சங்கத்தின் பட்டியலில் இருளர் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார். 30 வயதான காளியம்மாள் கோயம்புத்தூரில் ஆனைக்கட்டி மலைகளில் வாழும் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூகத்தை சேர்ந்த முதல் பெண் வழக்கறிஞர் இவராவார். இருளர் சமூகத்தில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே வழக்கறிஞர்களாக பட்டம் பெற்றுள்ளனர். காளியம்மாள் கூலி தொழிலாளர்களுக்கு பிறந்தவர். தொடக்கப்பள்ளி முடித்தபின், அவர் ஆனைக்கட்டியில் உள்ள ஓர் அரசாங்க பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தார். உயர்நிலை பள்ளியில் படிக்கும்போது, ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு நான்கு கிலோமீட்டர் வரை அவர் நடந்துவந்தார். சிலர் கொடுத்த நிதி உதவியுடன் கோயம்புத்தூர் கலை கல்லூரியில் பொருளாதார துறையில் சேர்ந்தார். 2014ல் சட்டத் துறையில் அவர் சேர்ந்தார்.

"நான் சிறுவயதாக இருந்தபோது, எங்கள் கிராமத்துக்கு ஒரு வழக்கறிஞர் அடிக்கடி வருவார். அப்போதே வழக்கறிஞராக ஆகவேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். என்னுடைய சமூகத்தினருக்கு வழிகாட்டவும் அவர்களுக்கு அவர்களது அடிப்படி உரிமைகளை அளிக்கவும் நான் விரும்பினேன்," என்று காளியம்மாள் கூறினார்.

பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதில்லை. இந்த சமூகங்களை சேர்ந்த அதிகமானோர் இத்தொழிலை தேர்ந்தெடுப்பது முக்கியம். இதன் மூலம் அவர்கள் தங்கள் அடிப்படி உரிமைகளை பெறமுடியும் என்று கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்க செயலாளர் குறிப்பிட்டார். வாழ்க்கையில் பல இன்னல்களையும் சவால்களையும் சந்தித்துள்ளார் காளியம்மாள். சில நல்ல உள்ளங்கள் உதவி செய்யவில்லையென்றால், இந்த சாதனையை படைத்திருக்க முடியாது என்றார் காளியம்மாள்.