சென்னை: சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அதிவேக ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது.
இதன்படி சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக ரேணிகுண்டாவுக்கு 145 கி.மீ. வேகத்தில் செல்ல ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
கொவிட்-19 தொற்று ஊரடங்கின்போது இந்த ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் சென்னை-திருப்பதி ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதை ஏற்று சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரெயில் (06727) நீட்டிப்பு செய்யப்பட்டு சென்னை-திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத விரைவு ரயிலாக கடந்த 13ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து சென்னை-திருப்பதி அதிவேக ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த ரயில் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக ரேணிகுண்டாவுக்கு 145 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்தச் சேவை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து தகவல் இல்லை.