திமுகவிலிருந்து விலகுவதாக மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிப்பு
சென்னை: திமுகவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் அக்கட்சியிலிருந்து மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவி விலகியிருக்கிறார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகு வதாக அவர் அறிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விலகியதாக கட்சித் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
"கடந்த சில நாட்களாகவே எனது பதவி விலகல் குறித்து வெவ் வேறு ஊகத் தகவல்கள் வெளியாயின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். அதில் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று முடிவு செய்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகியதாக கடந்த ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியே கட்சி தலை வருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். நான் பெரியார் கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு உள்ளேன்," என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிக்கப்பட்டார். இதனால் கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அதிர்ச்சி அடைந்தனர்.
பா.ஜனதா வேட்பாளரான சரஸ்வதியிடம் 206 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார். கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்காததால் தோல்வியை தழுவியதாக அவர் புகார் எழுப்பியிருந்தார். இது குறித்து இரு ஒன்றிய செயலாளர்கள் மற்றும் ஒரு முக்கிய நிர்வாகி மீது கட்சித் தலைமையிடம் அவர் புகார் செய்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே அண்மைய உட்கட்சித் தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் செய்த இரண்டு ஒன்றியச் செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். வாக்கு எண்ணிக்கையில் சுப்புலட்சுமி ஜெகதீசனே முன்னிலை வகித்துவந்த நிலையில் திமுகவுக்கு விழுந்த அஞ்சல் வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டதால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி வெற்றி வாய்ப்பை இழந்தார்.
திமுகவுக்கு விழுந்த அஞ்சல் வாக்குகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்தபோது சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஆதரவாக நிர்வாகிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. அப்போதே அவர் மனம் உடைந்துவிட்டார்.
சுப்புலட்சுமி ஜெகதீசனின் பதவி விலகல் ஏற்கப்படும் பட்சத்தில் அந்த இடம் காலியாகும். அடுத்த மாதம் நடைபெற உள்ள திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய துணைப் பொதுச் செயலாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

