சென்னை: மியன்மாரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என்று அரசாங்கத்தை கமல்ஹாசன், சீமான் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச்சென்ற தமிழக இளைஞர்கள் உட்பட இந்தியர்களை மியான்மார் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப்படுத்துவதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு வேலை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட தமிழர்கள், இந்தியர்கள் மியன்மாரில் உள்ள சிறையில் சிக்கித் தவிக்கும் காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அவர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

