சென்னை: புதுடெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல் வருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து தமிழக அரசு மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. தமிழக பாஜக இதில் பெரிதாகத் தலையிடவில்லை. ஆனாலும் டெல்லி மேலிடம் அதிமுகவில் நடக்கும் போட்டியை உற்றுக் கவனித்தே வருகிறது.
இந்த நிலையில், எடப்பாடி பழனி சாமி திங்கள் இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் சிவி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சென்றனர்.
நேற்றுக் காலை 11.30 மணி அளவில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர்.
பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
"நானும் வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோரும் மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்தோம்.
"தமிழகம் முழுவதும் தடையின்றி போதைப்பொருள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளையர்கள் சீரழியக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
"இதை ஏற்கெனவே நான் பலமுறை சட்டமன்றத்தில் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன். அறிக்கைகள் கொடுத்தோம். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
"எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. எங்கே போதைப் பொருள் விற்றாலும் அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தாலும் அதை தடுத்து நிறுத்தி சட்ட ரீதியாக போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு மெத்தனமாக அலட்சியமாக இருக்கின்ற காரணத் தினால் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறு கிறது.
"கொரோனாவால் 2 ஆண்டு களாக வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதார சூழ்நிலை மந்தமாக இருக்கிறது. வாழ்வதற்கே போராடிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது," என்று அவர் ஆவேசத்துடன் சொன்னார்.
தான் முதல்வராக இருந்தபோது கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தையும் அம்மாவின் அரசு இருந்தபோது பிரதமரிடம் 'நடந்தாய் வாழி காவிரி' என்ற மற்றொரு திட்டத்தையும் தமிழகத்தில் நிறை வேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறிய எடப் பாடி பழனிசாமி, இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அமித்ஷாவை கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

