பரம்பிக்குளம்: பொள்ளாச்சிக்கு அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் மதகு சேதமடைந்ததால் அணையில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறிவருகிறது.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி அணையின் மற்ற இரண்டு மதகுகளும் உடனடியாக திறக்கப்பட்டதாகவும் இதனால் விநாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் வெளியேறி வீணாவதாகவும் தெரிகிறது.
பரம்பிக்குளம் அணை 72 அடி உயரம் கொண்டது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இந்த அணை தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மதகு உடைந்த தகவல் அறிந்து தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் செந்தில் பாலாஜி, நீர்ப்பாசனத் துறைச் செயலாளர் சந்திப் சக்சேனா உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். அணையில் மதகு உடைந்து தண்ணீர் வீணாவது வேதனை அளிப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும் முதல்வரிடம் இதுபற்றிக் கலந்தாலோசித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மூன்று மதகுகளும் திறந்துவிடப்பட்டதால் சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையில் 27 அடிக்கு மேல் அதாவது 45 அடி வரை தண்ணீர் வடிந்தால்தான் சீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும். அதற்கு இன்னும் பத்து நாள் ஆகலாம் என்று கருதப்படுகிறது.
மிக அதிகமான தண்ணீர் வீணாவதால் இந்த ஆண்டு பாசனம் பாதிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. ஆனால் மற்ற அணைகள் நிரம்பி இருப்பதால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

