கம்பம்: தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், தேனி மாவட்டம் கம்பத்தில் நடத்திய விசாரணை யில், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் யாசர் அரபாத் என்பவரை நேற்று அதிகாலை கைதுசெய்தனர்.
தமிழ்நாட்டில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் குண்டு வெடிப்பு, தீவிரவாதப் பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடும் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தமிழகத்திலும் இருப்பதாகத் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் மதுரைப் பகுதி நிர்வாகியான 38 வயது யாசர் அரபாத்தின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த யாசர் அராபத்தை எழுப்பி விசாரணை நடத்தினர். அதில் கணினியில் தகவல்களைச் சேமிக்க உதவும் கருவிகள், விலை உயர்ந்த இரண்டு கைத்தொலைபேசிகள், 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் அறிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியதுடன் யாசர் அரபாத்தைக் கைதுசெய்தனர்.
தகவல் கேள்விப்பட்டதும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். யாசர் அரபாத்தை விடுதலை செய்யக்கோரிக் குரலெழுப்பினர். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததால் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 41 பேரைக் கைதுசெய்ய நேரிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
முத்துதேவன்பட்டியில் உள்ள அறிவகம் எனப்படும் இஸ்லாமிய ஆராய்ச்சி மையத்திலும் சோதனை நடத்தி சில பொருள்களைக் கைப்பற்றியதாகக் காவல்துறையினர் கூறினர்.
நேற்று, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, தேனி, கோவை, கடலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

