சென்னை: திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022, அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது. அதை முன்னிட்டு, அந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமான 'மிஸ் சென்னை திருநங்கை' அழகிப்போட்டிக்கான தேர்வு, சென்னை கீழ்ப்பாக்கம் டான்பாஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மூன்று நாள்கள் நடைபெறும் திருநங்கைகளின் முப்பெரும் விழாவின் முதல் நாளான அடுத்த மாதம் 13ஆம் தேதி, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் திருநங்கைகளுக்கான முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சி இடம்பெறும்.
அக்டோபர் 14ஆம் தேதி திருநங்கைகள் பாலின மாற்றத்திற்கு மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சைகள், அதற்கான உதவிகள் ஆகியவை குறித்த கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதி நாளான அடுத்த மாதம் 15ஆம் தேதி, அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெறும். இதற்கான தேர்வுச் சுற்றில் நேற்று முன்தினம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 22 திருநங்கைகள் கலந்துகொண்டனர். இவர்களில் 12 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுசெய்யப்பட்டனர்.
'மிஸ் சென்னை திருநங்கை' இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் மூவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழோடு மிஸ் சென்னை திருநங்கை பட்டமும் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சி, மூன்றாம் பாலினத்தவர்மீதான சமூகத்தின் பார்வையை மாற்றவும் அவர்கள் சமூகத்தில் இயல்பாகக் கலந்து பழகவும் உதவும் என்று நம்பப்படுகிறது.