கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொட நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை தற்போது ஐந்து காவலர் தனிப்படை விசாரித்து வருகிறது. சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்பட பலரும் விசாரிக்கப்பட்டுள்ளனர். கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், சம்சீர் அலி உள்ளிட்டோர் முன்னிலையாகினர். ஆனால் வழக்கு அடுத்த மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.
மருத்துவப் படிப்பு; ஒரே நாளில்
5,000 பேர் விண்ணப்பித்தனர்
சென்னை: தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஒரு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மற்றும் இருபது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவர்கள் நேற்று முன்தினம் முதல் இணையம் வழியாக விண்ணப்பிக்கத் தொடங்கி உள்ளனர். அடுத்த மாதம் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியதில் 66 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே தொடங்கிய முதல் நாளில் 5,000 பேர் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் சேர பதிவு செய்தனர்.

