சென்னை: வரதட்சணை கொடுமை வழக்கில் காவலர்களால் தேடப்பட்ட நபர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் அனைத்துலக விமான நிலையத்துக்கு கத்தாரில் இருந்து விமானம் ஒன்று வந்தது.
அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது திருச்சியை சேர்ந்த ராமலிங்கம், 46, என்பவர் நைஜீரியா நாட்டில் இருந்து கத்தார் வழியாக சென்னை வந்திருந்தார்.
அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு அவருடைய மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் அவர் இறந்ததாகவும் இதனால் ராமலிங்கம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த 15 ஆண்டுகளாக அவரை தேடி வருவதும் தெரிந்தது.
இதையடுத்து ராமலிங்கத்தை அதிகாரிகள் தனி அறையில் தங்க வைத்தனர். உடனே இது பற்றி திட்டக்குடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

