மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் கடத்தல்
தூத்துக்குடி: மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட பத்து டன் போதைப்பொருளை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டபோது 'பாப்பி சீட்' என்று குறிப்பிடப்படும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மூட்டை மூட்டையாக சிக்கியது.
இதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.1.70 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் பல்வேறு பொருள்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில், 'ஒயிட் சிமெண்ட்' எனப்படும் மூலப்பொருள் இறக்குமதி செய்யப்படும்போது, அதனுடன் 'பாப்பி சீட்' என்ற போதைப்பொருளும் கடத்தி வரப்படுவதாக மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்த ஒரு கப்பலை அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். கப்பல் கரைக்கு வந்த உடனேயே அதில் ஏறி முழுமையாக சோதனையிட்டனர்.
அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டைகளில் பத்து டன் எடைகொண்ட 'பாப்பி சீட்' போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
உலக அளவில் துருக்கி, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நான்கு நாடுகள் மட்டுமே இந்தப் போதைப்பொருளை குடிமக்கள் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதையடுத்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதுடன், அதை இறக்குமதி செய்தது யார் எனும் விசாரணை தொடங்கி உள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
பல்வேறு நூதன முறைகளைப் பயன்படுத்தி கடத்தி வரப்படும் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் எப்படியாவது கண்டுபிடித்து பறிமுதல் செய்துவிடுகின்றனர்.
இந்நிலையில் கப்பல் மூலமாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

