கோவை: மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நானூறுக்கும் மேற்பட்ட சிறப்புக் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடுவோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை சித்தாபுத்தூர் பகுதியில் மாவட்ட பாஜக அலுவலகம் இயங்கி வருகிறது. அண்மையில் அடையாளம் தெரியாத சிலர் இந்த அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். இந்தச் சம்பவத்தை அடுத்து கோவையின் பரபரப்பான பகுதியில் உள்ள துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதுடன், சுற்றுக்காவல் பணியில் அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனினும், மூன்றாவது சம்பவமாக கோவை நூறடி சாலையில் உள்ள பாஜக ரத்தினபுரி மண்டலத் தலைவர் மோகன் என்பவருக்குச் சொந்தமான கடையில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. மேலும், குனியமுத்தூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தியாகுவின் கார் மீது சிலர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துச் சென்றனர். இதனால் கோவையில் பதற்றச் சூழ்நிலை காணப்படுகிறது.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் உள்ள ஆத்துப்பாலம், டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாஜக கட்சி அலுவலகம், இந்து முன்னணி அலுவலகம், பள்ளிவாசல்கள் ஆகிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.