மதுரை: பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, அதிமுக ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு தவறு நடந்துள்ளதாக தமிழக நிதி, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளைத் திருத்துவது திமுக அரசின் கடமை என்றார்.
மேலும், இவ்வாறு தவறுகளைத் திருத்தாவிட்டால் திமுகவின் அடிப்படைக் கொள்கைக்கே துரோகம் செய்வதுபோல் ஆகிவிடும் என்றும் அவர் கூறினார்.
"திமுக அரசைப் பொருத்தவரை, சுயமரியாதை, சமூக நீதி, எல்லாருக்கும் எல்லாம், சமமான வாய்ப்பு, கல்வி மூலம் முன்னேற்றம், பொருளாதார நீதி என்ற அடிப்படையில் அரசுக் கோப்புகளைச் சரிபார்க்கிறோம்.
"இதுவரை ஐந்தாயிரம் கோப்புகள் என்னிடம் வந்திருக்கும். அவற்றில் சில கோப்புகளை விளக்கம், திருத்தம் கேட்டும் வேறு காரணங்களுக்காகவும் திருப்பி அனுப்பியிருக்கிறேன்.
"எதற்காக நிதியமைச்சர் கோப்பைத் திருப்பி அனுப்புகிறார் என்று முதல்வருக்குத் தெரியும். ஒவ்வொரு திட்டமும் நமது கொள்கையை வளர்க்கிறது, கொள்கைக்கு ஏற்புடையது என்றால் உடனடியாக கையெழுத்திடுவேன். தெளிவில்லை, கணக்கு சரியில்லை என்றால் திருப்பி அனுப்பிவிடுகிறேன்," என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்குரிய உதவித்தொகை உயர்த்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இது சமூக நீதிக்கு எதிரான செயல் என்றார்.
"சில தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தவறு நடக்காமல் உண்மைப்பயனாளிகளுக்கு அரசுத் திட்டங்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதை இலக்காக வைத்திருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தபோது அதிமுக கொண்டுவந்த விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த வேண்டியிருந்தது.
"இந்த இரண்டு திட்டங்களிலும் அதிமுக ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் தவறு நடந்துள்ளது. ஏழை, சாமானிய மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய நிதியை கொள்ளையடித்திருக்கிறார்கள்," என்றார் பழனிவேல் தியாகராஜன்.

