சென்னை: சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, பாலியல் தொழிலில் தள்ளியதாக 21 பேரை குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த 15ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்தக் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்தது.
மொத்தமுள்ள 21 பேரில் சிறுமியைப் பாலியல் தொழிலில் தள்ளிய ஏழு பெண்கள் உட்பட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், 44, காவல் ஆய்வாளா் புகழேந்தி, 55, தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் வினோபாஜி, 39, உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனையும் விதிக் கப்பட்டது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜெலட்சுமி இந்த அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்ட நீதிபதி, குற்றவாளிகள் 21 பேருக்கும் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த அபராதத் தொகையான ரூ.2 லட்சமும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டை யைச் சேர்ந்த பூங்குழலி (உண்மைப் பெயரல்ல) என்ற 13 வயது சிறுமி கடந்த 2020 நவம்பர் மாதத்தில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "எனது உறவினர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளர், அரசியல் கட்சி யைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் என்னை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமைப்படுத்து கிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்குத் தொடர்பில், சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, அவருக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ் உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, 21 பேர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைதாகினர்.
நால்வர் காணாமல் போயுள்ளனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
கைதான தரகர் ராஜேந்திர னிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏழைச் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதையும் பல துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு சிறுமிகளை அனுப்பி வைத்ததையும் ஒப்புக்கொண்டார்.

