மு.க.ஸ்டாலின்: ஒற்றுமை உணர்வுதான் நம்மை எங்கும், எப்போதும் காப்பாற்றும்
சென்னை: சாதி, மதங்களைக் கடந்து பணியாற்றினால்தான் நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தென்னிந்தியத் திருச்சபை பவள விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியா என்பது பல்வேறு மதத்தவர் வாழும் நாடு என்றும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
"அவரவர் மத நம்பிக்கை என்பது அவரவருக்கு சொந்தமானதே தவிர, மற்றவர்களுக்கு எதிரானதாக இருக்காது. எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாதிரி ஆட்சியின் அடிப்படை நோக்கம்.
"எமது அரசு என்பது அனைவரையும் உள்ளடக்கிய அரசுதான். இந்த அரசுக்கு அன்பும் உரிமையும் இரண்டு கண்கள். ஒரு கை உழைக்கவும் இன்னொரு கை உணவூட்டவுமான அரசாக செயல்பட்டு வருகிறோம்.
"எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும் மக்களுக்கு அன்பை, ஒற்றுமையைப் போதிக்கும் அமைப்பாகவே தென்னிந்தியத் திருச்சபை இருக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திக்கற்றவர்களுக்கு திசையாக திமுக அரசு செயல்படுகிறது என்றும் அன்பும் உரிமையும் திமுக அரசின் இரு கண்கள் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
"ஒற்றுமை உணர்வுதான் நம்மை எங்கும், எப்போதும் காப்பாற்றும். திராவிட மாதிரி ஆட்சியில் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதே சமத்துவம். யாரையும் வேற்றுமையாகப் பார்க்காதே என்பதுதான் சகோதரத்துவம். அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பதுதான் ஒற்றுமை. ஏழைகள் மீது கருணை காட்டு என்பதுதான் இரக்கம். அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதே நீதி. மற்றவர்களுக்காக வாதாடுவது தியாகம்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அனைவரும் உலகுக்கு உப்பாக இருங்கள். உலகுக்கு ஒளியாய் இருங்கள் என்பதே தமது அன்பான வேண்டுகோள் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஒட்டுமொத்த இந்தியாவையும் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்றார்.

