சென்னை: அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அனைவரும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை நேற்று நேரில் சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிக விரைவில் தாம் அனைவரையும் சந்தித்துப் பேச உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகிஉள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்குவதும் அதுபோல் இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் தரப்பு நீக்குவதும் என தினமும் ஏதேனும் ஒரு பரபரப்புத் தகவல் வெளியான வவண்ணம் உள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்படுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களுக்குள் இந்த நியமனம் செல்லாது என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவை விட்டு நீக்கப்படுவதாகவும் பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து நேற்று பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். மூத்த தலைவர் என்ற முறையில் அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக அவரிடம் ஆலோசனைகளைப் பெற்றதாகவும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.
"சுமார் ஒரு மணி நேரம் இருவரும் ஆலோசனை செய்தோம். அவர் தமது அனுபவங்களைக் கூறினார். அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து பண்ருட்டியார் தெரிவிக்கும் கருத்துகளை மக்கள் ரசிக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா முன்னெடுத்த கொள்கைகளை அவர் மக்களிடம் கூறி வருகிறார்.
"பொறுத்திருந்து பாருங்கள். அனைவரையும் சந்திப்பேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இருந்தவர்களை சந்தித்து ஆசி பெறுவோம்," என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

