சென்னை: தென்கொரிய தலைநகர் சோலுக்கும் சென்னைக்கும் இடையே நேரடி விமானச் சேவைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழிற் சந்திப்புகளுக்காக தென்கொரிய சென்றுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அங்கு கொரிய தமிழ்ச் சங்க பிரதிநிதிகள், தமிழ் மக்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது விமானச்சேவை குறித்து மட்டுமல்லாமல், தென்கொரியாவில் ஆசிய பள்ளி நிறுவ அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அங்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்-கொரிய பண்பாட்டு, வரலாற்றுத் தொடர்புகளை ஆய்வு நோக்கில் அணுகி ஆராய்ச்சி கட்டுரைகளாக வெளிக்கொண்டு வருவது அவசியம் என்றார்.
இது தொடர்பான ஆய்வுப்பணிகளில் ஈடுபடுவோர் உலகத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அரசின் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது சிறப்பாக அமையும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழ் வளர்ச்சித் துறை மூலம் நடத்தப்படும் இணையவழிக் கல்விக் கழகத்தின் மூலம் வெளி நாடுகளில் தன்னார்வ ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இணையவழிப் பள்ளிகளை அமைக்க உதவ வேண்டும் என்றும் மிகச்சிறந்த ஐம்பது தமிழ் புத்தகங்களை கொரிய மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

