சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சருமான ஆ. ராசா உட்பட ஐந்து பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பில் மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2015ல் ஆ.ராசா வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி சிபிஐ வழக்குப் பதிவுசெய்தது.
ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஸ் குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, சில தனியார் நிறுவனங்களையும் இணைத்து மொத்தம் 16 பேர் மீது குற்ற வழக்குப் பதிவானது.
அதாவது, 1999ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆ.ராசா தன் அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி கூடுதலாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அள வுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது.
இப்புகாரின் அடிப்படையில் ராசாவின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆ.ராசா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஒருவழியாக முடிவடைந்ததை அடுத்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ராசா உட்பட ஐவர் மீது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தைவிட 579 விழுக்காடு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் ஏறக்குறைய 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகளைக் குவித்திருந் ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றப்பத்திரிகைக்கு எதிராக ஆ. ராசா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சிபிஐ வழக்குத் தொடுத்தது.
கடந்த 2017ல் சிபிஐ தொடுத்த 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ.ராசாவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
"2ஜி வழக்கின் குற்றப்பத்திரி கையில் உண்மையில்லை. தேவை யான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவில்லை," என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
இந்த தீர்ப்பிற்கு எதிராக சிபிஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

