கடலூர்: கையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் திடீரென்று உயிரிழந்த நிலையில், அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவமனையை அடித்து நொறுக்கி பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் காவலர்களுக்கும் பெண்ணின் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், சாவடி பகுதி யைச் சேர்ந்தவர் மீனா, 58. இவர், தன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து, கடலூர் பாரதி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சனியன்று சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனை செய்த மருத்து வர்கள், மீனாவுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனக் கூற, அதற்கு உறவினர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், ஞாயிறன்று கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மீனா, பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அதன்பிறகு, உறவினர்களுடன் நன்றாகப் பேசிக்கொண்டிருந்த மீனா, திங்களன்று பிற்பகலில் திடீரென உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், "கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் திடீரென உயிரிழக்க வாய்ப்பில்லை," என வாக்குவாதம் செய்தனர்.
மருத்துவமனையின் தவறான சிகிச்சை முறையே மீனாவின் உயிரிழப்புக்குக் காரணம் எனவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
மீனாவுக்குத் திடீர் இதயவலி ஏற்பட்டதால்தான் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர்.
இதை ஏற்க மறுத்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர்.
கடலூர் புதுநகர் காவல்துறையில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகாரளித்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

